Showing posts with label பயம். Show all posts
Showing posts with label பயம். Show all posts

Tuesday, 16 April 2013

விளையாட்டு மைதானம் சிறுவர்களுக்கு சமூக வளர்ச்சியை ஏற்ப்படுத்திக் கொடுக்கும் ஓர் இடம்

ராஜேல் 3 வயது நிரம்பியவள்.  கோடை விடுமுறைக்குப் பின் பாலர் பாடசாலைக்குச் செல்ல இருக்கின்றாள்.  பெற்றோர், குடும்பம் என்ற எல்லை தாண்டி சுற்றுப்புறச் சூழலுடன் ஊடாட வேண்டிய தருணம் அவளுக்கு வந்து விட்டது. 

ஒரு மதிய வேளையில் அவளை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.  அவளுடைய 2 வது நிரம்பிய தம்பியும் கூட வந்திருந்தான்.  சிறுவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  சிறிது நேரம் கழித்து அங்கு இன்னும் இரண்டு சிறுவர்கள் விளையாட வந்தார்கள்.  அந்தச் சிறுவர்களைக் கண்டவுடன் இவர்களின் விளையாட்டுத் தடைப்பட்டது.  ராஜேலின் முகத்திலே பயமும் வெட்கமும் கலந்த ஒரு உணர்ச்சியை அவதானித்தேன். 

பயந்த சுபாவம் என்பது ஒன்றும் பிளைகளின் பிறவிக்குணம் இல்லையே.  அவளுக்கு அதிக அளவில் சமூக வளர்ச்சி ஏற்பட வேண்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். எனவே அவளை எப்போதுமே வீட்டிற்குள்ளேயே விளையாட விடாமல் தினமும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன்.  பிற சிறுவர்கள் மீதான அவளுக்கிருந்த பயம் படிப்படியாகக் குறைவதை அவதானித்தேன். 

இப்பொளுது எல்லாம் பொது விளையாட்டு மைதானத்தில் ராஜேல் பிற சிறுவர்களைக் கண்டால் சகஜமாகத் தன் விளையாட்டைத் தொடர்கின்றாள் அல்லது அவர்களுடன் சேர்ந்து விளையாடுகின்றாள்.  அவளைப் பாலர் பாடசாலைக்குத் தயார்ப்படுத்திய நிறைவு எனக்குள் ஏற்ப்படுகின்றது.

விளையாட்டு மைதானம் என்பது சிறுவர்களுக்கு நல்ல உடல் விருத்தியை ஏற்படுத்திக் கொடுக்கின்ற இடம் மட்டும் இல்லை.  அது நல்ல சமூக வளர்ச்சியை ஏற்ப்படுத்திக் கொடுக்கின்ற இடமும் கூட.  சிறு பிள்ளைகளை அடிக்கடி விளையாட்டு மைதானத்திற்கும் வெளி இடங்களிற்கும் அழைத்துச் செல்வது மிகவும் அத்தியாவசியமானது. 

பயந்த சுபாவமும் வெட்கப்படுகின்ற சுபாவமும் அவர்களுடய பிறவிக்குணம் என்று நினைப்பது தவறானது.  அவை படிப்படியான முயற்சியால் களையப்பட வேண்டியவை.