சிறுவர் உலகம் தனித்துவமானது. அதை நாம் புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு இலகுவாக வழிகாட்ட முடியும்.
Tuesday, 17 August 2021
மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்லும் பிள்ளைகள்
Sunday, 21 February 2021
பொறுமையின் எல்லை எதுவரை
நான் தவறுகள் செய்பவன். சில தவறுகளை தெரிந்தே செய்கிறேன். சில தவறுகளை தெரியாமல் செய்கிறேன். புதிதாகவும் தவறுகள் செய்கிறேன். செய்த தவறுகளை திரும்ப திரும்பவும் செய்கிறேன். எனக்கு தெரியும் செய்த தவறுகளை, அவை தவறுகள் என்று தெரிந்த பின்பும் திரும்ப திரும்ப செய்யும் போதுதான் உங்களுக்கு என் மீது கோபம் அதிகமாகிறது.
உங்களுக்கு என்மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும் நான் ஒரு பிள்ளை என்பதை மறந்துவிடாதீர்கள். செய்த தவறை திரும்ப திரும்ப செய்வது பிள்ளைக்குணம் தான்.
செய்த தவறிற்கு தண்டனையாக பிள்ளைகளை கை நீட்டி அடித்தல் தவறு என்று விஞ்ஞான ரீதியாக நிரூபணமாயிற்று. பிள்ளைகளை அடிக்கும் கடும் போக்கில் இருந்து உலகம் மீண்டு வருகிறது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? கோலால் அடித்தல் குற்றம் என்றால், கையால் அடித்தல் குற்றம் என்றால் சொல்லால் அடித்தலும் குற்றம் தான்.
என் தவறுகளுக்கான தண்டனைகளாக, அல்லது எச்சரிக்கைகளாக நீங்கள் தருகின்ற சொல்லடிகள் எனக்குள் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக மன நோவுகளையும் விரக்திகளையும், ஆழுமைச் சிதைவுகளையும் மட்டுமே தரக்கூடியன.
கடுமையான சொல்லாடல்களை விட அன்பான நட்பான புத்திமதி அல்லது நினைவுறுத்தல்கள் அதிக பலன்களை தரக்கூடியன. சிறுவர்களாகிய எம் தன்னம்பிக்கையையும் சுயகௌரத்தையும் அவை பாதிப்பதில்லை. மாறாக வளர்த்துவிடுவதுடன் எது சரி எது பிழை என்று பகுத்தறியும் திறனையும் தருகின்றன.
இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். எத்தனை தரம் தான் மன்னிப்பது. எத்தனை தரம் தான் கோபத்தை அடக்குவது. திரும்ப திரும்ப அதே தவறை செய்கின்ற பிள்ளையை எத்தனை தரம் தான் பொறுத்துக்கொள்வது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா என்று உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லப் போகிறீர்கள்.
செல்லாது செல்லாது உங்கள் நியாயம் செல்லாது. எத்தனை தரம் தான் என்ற உங்கள் கேள்விக்கான பதில் இதோ.
நாங்கள் திருந்தி முடிக்கும் வரை. பெரியோர்களாகிய உங்களுக்கு பொறுமை மிக முக்கியம். பொறுமையும் நட்புணர்வும் சேர்ந்த அணுகுமுறை மட்டுமே சிறுவர்களாகிய எங்களை வழிநடத்தும் சிறந்த கருவியாகும்.
Saturday, 15 June 2013
அளவுக்கு அதிகமான கண்டிப்பு பிள்ளைகளில் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும்
இது என் மகளின் தோழியின் கதை. அவள் ஓர் அழகான யப்பானியச் சிறுமி. பார்ப்பதற்கு ஒர் ரோஜாப்பூப்போல மென்மையாக இருப்பாள். பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. என் மகளிற்கு அவளுடைய நட்புக் கிடைத்ததற்க்காக மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்திருக்கிறேன்.
அவளுக்குப் பிரச்சனை அவளுடைய அம்மாதான். அவர் உண்மையிலேயே நல்லவர்தான். மிகவும் அக்கறையுள்ள ஒரு தாய். மகளுக்கு எந்தக் குறையும் வைப்பது இல்லை. மகள் ந ல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டுகின்றார். தப்பித் தவறி மகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கினால் அதிகம் கண்டிக்கிறார். இங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
தாயுடைய அளவுக்கதிகமான கண்டிப்பு மகளினுள்ளே குழப்பங்களை உண்டுபண்ணுகின்றது. விளைவு: தாயினுடைய கண்டிப்புக்கும் நச்சரிப்புக்கும் பயந்த மகள் பரீட்சை நேரங்களில் நேர்மைக்குறைவாக நடந்து கொள்கின்றாள். பரீட்சையின் போது பாடப் புத்தகங்கள மறைத்து வைத்துப் பார்த்து எழுதுகின்றாள். சிறு காகிதத் துண்டுகளில் குறிப்புகளை எடுத்து வைத்து பரீட்சை நேரங்களில் பார்த்து எழுதுகின்றாள்.
இது ஒன்றும் அவளுடைய இயற்க்கைச் சுபாவம் இல்லை. நல்லொழுக்கம் நிறைந்த பெற்றோரிற்குப் பிறந்த நல்லொழுக்கம் மிக்க பெண்தான் அவள். அவளுடைய இந்த நேர்மைக் குறைவான புதிய நடத்தைக்குக் காரணம் அவளுடைய தாயின் அளவுக்கு அதிகமான கண்டிப்புத்தான். இந்த நிலமை இப்படியே தொடர்ந்தால் பிள்ளையில் எவ்வளவு பாரதூரமான விளைவுகள் ஏற்ப்படப் போகின்றன.
பிள்ளைகளின் படிப்பு விடயங்களிலும் சுதந்திரத் தன்மையிலும் அளவுக்கு அதிகமான கண்டிப்புக் காட்டுகின்ற பெற்றோர் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். பிள்ளைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மதிப்பெண்கள் கூடிக் குறைவது இயல்பான விடயம் தான். அதற்க்காகப் பெற்றோர் பதட்டம் அடையத் தேவையில்லை. பிள்ளைகள் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.




