Wednesday 25 March 2015

பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்து பள்ளிக்கு அனுப்பும்போது பிள்ளைகள் பள்ளியில் பூரணமாகத் தொழிற்படுவார்கள்











நான் மிகவும் ரசிக்கின்ற ஒரு ஆரோக்கியமான வெள்ளைக்காரக் குடும்பத்தின் கதை இது.  இது கதை கூட இல்லை.  காலை வேளைகளில் நடக்கின்ற ஒரு சம்பவம்.  இந்தக்குடும்பத்தில் இருவருமே வேலைக்குச் செல்லுகின்ற பெற்றோர்கள். இங்கு இது ஆணின் வேலை இது பெண்ணின்வேலை என்ற பேதம் இல்லை.  யாருக்கு நேரம் இருக்கின்றதோ அவர்கள் அந்த வேலையைச் செய்து முடிக்கின்றார்கள். அம்மாஅதிகாலையிலேயே  வேலைக்குச் சென்றுவிடுகின்றார்.  அப்பாவுக்கு நேரம் இருக்கின்றது.  அதனால் பிள்ளையைப் பாலர் பள்ளிக்கு அனுப்புகின்ற வேலையை அப்பாவே பொறுப்பெடுக்கின்றார்.  தனக்கான கடமையை ஒரு பெண்ணின் பக்குவத்துடனும் நேர்த்தியுடனும் செய்துமுடிக்கின்றார்.   இதனால் அவருடைய ஆண்மைக்கோ ஈகோவிற்கோ  (ego ) எந்த இழுக்கும் வந்துவிடப்போவதில்லை.  மாறாக தன்  மனைவியினதும் மகனினதும் மனதில் மிகஉயர்வாக இடம் பிடித்துவிடுவார்.

 பரவலாக எம்மவர் மத்தியில் காலை எழுந்தவுடன் பல் துலக்குகின்ற பழக்கம் தான் இருக்கின்றது.  அனால் காலையுணவு முடிந்தபின்பு பல் துலக்குவதுதான் மேலைநாடுகளில் பல்வைத்தியர்களால் பரிந்துரக்கப்படுகின்றது.  இரவு படுக்கைக்குச் செல்ல  முன்பு பல் துலக்குவது கட்டாயமானது.  அதன்பின்பு இரவு நித்திரையில் பல்லைக் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை.இதனால் காலை எழுந்தவுடன் பல் துலக்க வேண்டிய அவசியம் இல்லை.  காலையுணவு முடிந்தபின்புதான் பல்லிடுக்குகளில் புகுந்துள்ள உணவுத்துணிக்கைகளை அகற்றுவதற்காகப்  பல்துலக்க வேண்டும்.


இந்தக்கதையில் வருகின்ற அப்பா காலையுணவு அருந்துதல், பல்துலக்குதல் போன்ற செயற்பாடுகளைப்  பிள்ளையுடன் சேர்ந்து  செய்வதால் பிள்ளைக்கு நல்ல ஆரோக்கியமான முன்மாதிரிகையாக இடுக்கின்றார்.   எம் பிள்ளைகளிற்கு நாம் எதாவது கற்பிக்க விரும்பினால் அதன் முதலாவது கட்டம் நல்ல முன்மாதிரிகையாகத் இருப்பதுதான்.


மேலும் இந்த அப்பா ' நேரம் போச்சு, நேரம் போச்சு' என்று பிள்ளையை நச்சரிக்கவில்லை.  அவசரப்படுத்தவில்லை.  எந்த சந்தர்ப்பத்திலும் பிள்ளையிடம் சுடு சொல் பாவிக்கவில்லை.   அன்பையும் அரவணப்பையும் எந்தசந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை. பாடசாலையில் அவர் பிள்ளையை ஒப்படைக்கும்போது பிள்ளைக்கு வயிறும் மனமும் நிறைந்து இருக்கின்றன.  இந்தப் பிள்ளை தன முழுத்திறமையையும் பயன்படுத்தி பாடசாலையில் கல்வி கற்காமலா போகும்.

எல்லா அப்பாக்களுக்கும் காலை 10 மணிக்குத்தான் வேலை ஆரம்பிக்கும் என்று சொல்ல முடியாது.  அனாலும் அவரவர் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுதலும் உதவி தேவைப் படுமிடத்து உதவிபெறுதலும் தான் முக்கியம்.


Monday 16 March 2015

விரக்தியடைந்த பிள்ளை தவறான நடத்தையைக் காட்டத்தான் செய்யும்

சிறு பிள்ளைகள் அவர்களுடைய விளையாட்டுக்களின்போதோ பாடசாலைக் கல்வியின் போதோ தொடர்ச்சியான தோல்விகளைச் சந்திக்கும்போது விரக்தியடைந்து விடுகின்றார்கள்.  இந்த விரக்தியின் பலனாக விளையாட்டுப் பொருட்களைப் போட்டடித்தல், சத்தமிட்டு அழுதல்,  அருகிலுள்ளவர்களுடன் சண்டைசெய்தல் போன்ற தவறான நடத்தைகளைக் (misbehavior) காட்டத்தொடங்க்குவார்கள்.

தம்முடைய முயற்சியொன்றிலே தோற்றுப்போதல் அவர்களுக்குளே ஒருபோதும் சுய மதிப்பை (self -esteem ) வளர்க்கப்போவதில்லை.  மாறாக தாழ்வு மனப்பான்மையே வளர்த்துவிடும்.

எனவே பிள்ளை வழிகாட்டுதலைக் கடமையாகக் கொண்ட பெரியவர்கள், பிள்ளைகளை நன்கு அவதானித்து அவர்கள் விரக்தி நிலையை அடைய முன்பே அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை வெற்றியாக முடிக்கச் செய்ய  வேண்டும்.


இங்கு நான் முக்கியமாக வலியுறுத்துவது பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் செய்யவேண்டிய உதவியைத்தான்.   இந்த உதவியானது பிள்ளைகள் முயற்சியின்றி  இருக்கும்போது செய்யக்கூடாது.  அது அவர்களில் சோம்பேறித்தனத்தைத்தான் வளர்க்கும்.

மாலதி (4 வயது) உருட்டுக்கட்டையால்  மாவுருண்டையை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவள் நினைத்ததுபோல அவளால் மாவுருண்டையை உருட்ட முடியவில்லை.  நீண்ட நேர முயற்சிக்குப் பின் அவள் மிகவும் களைப்பும் விரக்தியும் அடைந்தாள்.   கோபத்துடன் உருட்டுக்கட்டையை எறிந்துவிட்டு சத்தமிட்டு அழத் தொடங்கினாள்.  இச்சந்தர்ப்பத்தில்
பின்வருவனவற்றில் பெரியவர் ஒருவரின் சரியான வழிகாட்டும் நடத்தை யாது?

1.  "மாலதி உடனடியாக உருட்டுக்கட்டையை எடுத்து  வை",  என்று அதிகாரத்தொனியில்  கத்திப் பேசுதல்.

2.  எதுவுமே விளங்காததுபோல அலட்சியமாக இருத்தல்

3.  நல்ல பிள்ளைகள் இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்கள்,  நல்ல பிள்ளையாக மீண்டுமொருமுறை முயற்சிசெய்யும்படி புத்தி சொல்லுதல்.

4.  உருட்டுக்கட்டையை எடுத்து மாலதியை  மடியில் இருத்தி அவளை ஆறுதல்படுத்தி  அவளுடைய கைகளுக்கு மேலாக தம்முடைய கைகளை வைத்து அவள் விரும்பும் வடிவத்தைச் செய்து முடிக்க உதவி செய்தல்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காவது விடைதான் சரியானது.   சரியான நேரத்தில் கிடைத்த அளவான உதவியானது மாலதிக்குள் தாழ்வு மனப்பான்மையை அல்லாது நல்ல சுய மதிப்பை வளர்த்து விட்டிருக்கும்.

Wednesday 28 January 2015

குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை வாயில் போட்டுச் சுவைப்பதன் மூலம் கல்வி கற்கின்றார்கள்.


குழந்தைகள் தம் கையில் எந்தப பொருள் அகப்பட்டாலும் அதை வாயில் போட்டு சுவைக்க ஆரம்பித்து விடுவார்கள்.  இது மிகவும் இயற்கையான ஒரு தொழிற்பாடாகும். உண்மையில் இது ஒரு கற்றற் செயற்பாடாகும்.  ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தம் ஐந்து புலன்களினூடாகவும் தான் கல்வி கற்கின்றார்கள்.  எம் ஐந்து புலன்களில் சுவை கூட ஒன்றுதானே.  குழந்தைகள் தம் சுவையுணர்வைப் பயன்படுத்திக்  கல்வி கற்கும் நோக்கில்தான் தாம் காணும் பொருட்களையெல்லாம் வாயில் போடுகின்றார்கள்.

எம்மில் சிலருக்கு இது ஒரு அருவருப்பு நிறைந்த செயற்ப்பாடாகத் தெரிகின்றது.  நான் இந்தக் கட்டுரையை எழுதுவது இவர்களுக்காகத் தான்.  குழந்தைகள் பொருட்களை வாயில் போட்டு விளையாடுவதைத் தடுப்பதன் மூலம் அவர்களின் கற்றற்  செயற்ப்பாட்டைத் தடுப்பதுடன் அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைப்பவர்களுமாகின்றோம்.  

பெரியவர்களாக இவ்விடயத்தில் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்.
பிள்ளைகளின் உயிரிற்கும் உடலிற்கும் ஆபத்தில்லாத சுத்தமான விளையாட்டுப் பொருட்களை  குழந்தைகளிற்கு எட்டக்கூடிய இடத்தில வைப்பதாகும்.  மறுதலையாக பிள்ளைகள் விழுங்கக்கூடிய சிறிய பொருட்களையும் ஆபத்தான பொருட்களையும் குழந்தைகளிற்கு எட்டாத இடத்தில் வைப்பதுமாகும்.

Sunday 11 January 2015

பிள்ளைகளின் சீரான நித்திரையில் அப்பாக்களுக்கும் பங்குண்டு

 பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நித்திரையும் முக்கியமாகும்.  இது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். 7-8 வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகள் இரவு எட்டுமணிக்கெல்லாம் படுக்கைக்குப் போவது முக்கியமாகும்.  அதன் பின்பு அவரவர் படிப்பு வீட்டுப்பாடங்களிற்கேற்ப படுக்கைக்குச் செல்லும் நேரம் பின்தள்ளிப் போகக்கூடும்.  முக்கியமாக கைக்குழந்தைகள் உரிய நேரத்தில் நித்திரை செய்து பழகுதல் வேண்டும்.  இது நவீன கால அம்மாக்களுக்குத் தெரிந்தவிடயம்தான். இப்பொழுதெல்லாம் சிறு பிள்ளைகளிற்கென்று தனியான அறையும் கட்டிலும் கொடுக்கக்கூடிய வசதி அனேகமான  வீடுகளில் உண்டு.

அம்மாக்கள் சிறு பிள்ளைகளை சாதுரியமாக உரிய நேரத்தில் நித்திரைக்குச் செலுத்தினாலும் அப்பாக்களின் புரிந்து கொள்ளாமையினால் அதிக வீடுகளில் இது பிரச்சினையாகி விடுகின்றது.  இது அதிக அம்மாக்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுத்தான்.

அப்பாக்கள் வீட்டில் இருக்கும்போது மிக மகிழ்ச்சியாக இருந்தால் மிகவும் சத்தமாகவும் ஆரவாரமாகவும் இருப்பார்கள்.  பிள்ளைகளின் நித்திரை நேரம் கடந்தாலும் அதுபற்றி அக்கறை இல்லாமல் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.


இரவு வேலை முடித்து நாடு ஜாமம் பன்னிரண்டு ஒரு மணிக்கு வீடு திரும்புகின்ற அப்பாக்கள் இப்போது மிக அதிகம். அந்த அப்பாக்கள் நாடு ஜாமத்தில் வீட்டில் உள்ள அத்தனை மின் விளக்குகளையும் ஏற்றி மிகவும் சத்தமாக நடமாடுவார்கள்.  அத்துடன் தொலைக்காட்டியையும் மிகச் சத்தமாகத் தூண்டிவிட்டுக்கொண்டு இருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் நித்திரை பாதிப்புக்குள்ளாகின்றது.   

அப்பாக்கள் இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு பிள்ளைகளின் சீரான நித்திரைக்குத் தமது பங்களிப்பையும் வளங்கவேண்டும்.  அதற்கு முதல் கட்டமாக குழந்தைகள்  இரவு எட்டுமணிக்கு  சத்தம் சந்தடியற்ற கண்ணையுறுத்தும் விளக்குகள் இல்லாத கதகதப்பான சுத்தமான படுக்கையில் படுக்கைக்குச் செல்லவேண்டும் என்ற உண்மையை அப்பாக்களும் உணரவேண்டும்.

பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?