Monday 16 March 2015

விரக்தியடைந்த பிள்ளை தவறான நடத்தையைக் காட்டத்தான் செய்யும்

சிறு பிள்ளைகள் அவர்களுடைய விளையாட்டுக்களின்போதோ பாடசாலைக் கல்வியின் போதோ தொடர்ச்சியான தோல்விகளைச் சந்திக்கும்போது விரக்தியடைந்து விடுகின்றார்கள்.  இந்த விரக்தியின் பலனாக விளையாட்டுப் பொருட்களைப் போட்டடித்தல், சத்தமிட்டு அழுதல்,  அருகிலுள்ளவர்களுடன் சண்டைசெய்தல் போன்ற தவறான நடத்தைகளைக் (misbehavior) காட்டத்தொடங்க்குவார்கள்.

தம்முடைய முயற்சியொன்றிலே தோற்றுப்போதல் அவர்களுக்குளே ஒருபோதும் சுய மதிப்பை (self -esteem ) வளர்க்கப்போவதில்லை.  மாறாக தாழ்வு மனப்பான்மையே வளர்த்துவிடும்.

எனவே பிள்ளை வழிகாட்டுதலைக் கடமையாகக் கொண்ட பெரியவர்கள், பிள்ளைகளை நன்கு அவதானித்து அவர்கள் விரக்தி நிலையை அடைய முன்பே அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை வெற்றியாக முடிக்கச் செய்ய  வேண்டும்.


இங்கு நான் முக்கியமாக வலியுறுத்துவது பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் செய்யவேண்டிய உதவியைத்தான்.   இந்த உதவியானது பிள்ளைகள் முயற்சியின்றி  இருக்கும்போது செய்யக்கூடாது.  அது அவர்களில் சோம்பேறித்தனத்தைத்தான் வளர்க்கும்.

மாலதி (4 வயது) உருட்டுக்கட்டையால்  மாவுருண்டையை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவள் நினைத்ததுபோல அவளால் மாவுருண்டையை உருட்ட முடியவில்லை.  நீண்ட நேர முயற்சிக்குப் பின் அவள் மிகவும் களைப்பும் விரக்தியும் அடைந்தாள்.   கோபத்துடன் உருட்டுக்கட்டையை எறிந்துவிட்டு சத்தமிட்டு அழத் தொடங்கினாள்.  இச்சந்தர்ப்பத்தில்
பின்வருவனவற்றில் பெரியவர் ஒருவரின் சரியான வழிகாட்டும் நடத்தை யாது?

1.  "மாலதி உடனடியாக உருட்டுக்கட்டையை எடுத்து  வை",  என்று அதிகாரத்தொனியில்  கத்திப் பேசுதல்.

2.  எதுவுமே விளங்காததுபோல அலட்சியமாக இருத்தல்

3.  நல்ல பிள்ளைகள் இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்கள்,  நல்ல பிள்ளையாக மீண்டுமொருமுறை முயற்சிசெய்யும்படி புத்தி சொல்லுதல்.

4.  உருட்டுக்கட்டையை எடுத்து மாலதியை  மடியில் இருத்தி அவளை ஆறுதல்படுத்தி  அவளுடைய கைகளுக்கு மேலாக தம்முடைய கைகளை வைத்து அவள் விரும்பும் வடிவத்தைச் செய்து முடிக்க உதவி செய்தல்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காவது விடைதான் சரியானது.   சரியான நேரத்தில் கிடைத்த அளவான உதவியானது மாலதிக்குள் தாழ்வு மனப்பான்மையை அல்லாது நல்ல சுய மதிப்பை வளர்த்து விட்டிருக்கும்.

1 comment: