Friday 28 June 2013

டாக்டருக்குப் படிப்பது போல வக்கீலுக்குப் படிப்பதுபோல பெற்றோருக்கும் படிக்க வேண்டும்

ஒருமுறை ஏழாம் வகுப்பில் படிக்கின்ற என் மகள் ஒரு வீட்டுப்பாடத்துடன் வந்தாள்.  மழைக்காடுகள் பற்றி  ஆங்கில மொழியில் அவள் ஒரு புத்தகம் தயாரிக்க வேண்டும்.  அவள் பாடம் படிக்கும் மொழியோ ஜேர்மன் மொழி.  அவள் இணையத்தில் தேவையான தரவுகள் திரட்ட வேண்டு.  பின்பு பொருத்தமான படங்களை அச்சுப்பிரதி எடுக்க வேண்டும்.  பின்பு ஜேர்மன் மொழியில் எடுத்த குறிப்புக்களை ஆங்கில மொழிக்கு மாற்ற வேண்டும்.  பின்பு அவற்றைஎல்லாம் ஒரு புத்தக வடிவில் தயாரிக்க வேண்டும்.  இவ்வளவும் செய்வதற்க்கு என்னுடைய உதவி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது. அந்த நேரம் பார்த்து மடி கணணி இணையத்தை இழுத்துத் தர மாட்டேன் என்று தொந்தரவு செய்தது.  ஒருவாரு அதைச் சரி செய்ய printer அச்சுப்பிரதி எடுத்துத்த்தர மாட்டேன் என்று அடம் பிடித்தது.  ஒருவாறு printerரைத் திருத்தி எடுத்து தேவையான படங்களைப் பெற்றுக்கொண்டபின் அவள் ஜேர்மன் மொழியில் தொகுத்திருந்த குறிப்புக்களை ஆங்கில மொழிக்கு மாற்ற வேண்டி இருந்தது.  இவ்வளவு வேலையும் முடிய இரவு 12 மணியாகிவிட்டது.  இதற்குப் பின்பும் அந்தச் சின்னப் பெண்ணால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அம்மா நீங்களே புத்தகமாகக் கட்டிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு நித்திரைக்குச் சென்றுவிட்டாள்.

இதுவாவது சற்றுச் சிரமம் குறைந்த வேலை.  பிறிதொரு நாளில் இன்னுமொரு வீட்டுப் பாடத்துடன் வந்தாள்.  அவள் உயிரியல் படிக்க ஆரம்பித்த நேரம் அது.  மனித முள்ளந்தண்டு போன்ற மாதிரி ஒன்று தயாரிக்க வேண்டும்.  இம்முறை நான் தப்பித்தேன்.  மாட்டிக் கொண்டது அவள் அப்பா தான்.  தேவையான மூலப் பொருட்களை எங்கு வாங்குவது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஆனாலும் செல்ல மகள் கேட்டு விட்டாளே.  கடைகடையாக ஏறி இறங்கி ஒரு மாதிரியாகத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார்.  வழக்கம் போலவே ஒரு எல்லைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மகள் போய்ப் படுத்து விட்டாள். தகப்பனார் தன்னுடைய வேலை முடிக்க இரவு ஒரு மணியாகி விட்டது.  இதோ அவர் செய்த மாதிரி முள்ளந்தண்டு.
அப்பப்பா! ஒரு பதின் மூன்று வயது பள்ளிப் பிள்ளைக்குப் பெற்றோராக இருக்க எவ்வளவு தகமைகளையும் திறமைகளையும் கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது.  எமக்கு முடிந்த்த திறமைகள் கையளவுதான்.  இன்னும் முடியாத திறமைகள் கடலளவு இருக்கின்றனவே.

இன்று நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது எனக்குத் தாயகத்திலேயே தெரிந்த பெண் ஒருவர் இங்கு புலத்திலே வாழ்கின்றார்.  தொலைபேசியில் பேசும் போது எல்லாம் தனக்கு விதம் விதமான தாயக உணவுகள் சமைக்கத் தெரியும் என்று பெருமையாகச் சொல்லுவார்.  எல்லாம் இங்கு வந்து பழகியதுதானாம்.  அது மட்டும் அல்லாது தன் பிள்ளைகளிற்க்கு விதம் விதமான தாயகப் பட்டாடைகள் அணிவித்து விழாக்களிற்க்கு அழைத்துச் செல்வார்.  அவருடைய கதைகளைக் கேட்கும் போது எனக்குச் சற்றே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும்.  ஏனன்றால் புலத்திலே இருந்து கொண்டு தாயக வாழ்வு வாழ என்னால் முடியவில்லை.  அது என்னுடைய திறமைக்குறைவு என்றே நான் கருதுகின்றேன்.

ஒருமுறை அந்தப் பெண் முகப் புத்தகத்திலே (face book) தன் பிள்ளைகளின் அழகான படங்களை இணைத்திருந்தார்.  கண்ட மாத்திரத்திலே எனக்கு அவரின் அழகான சிறுமிப் பருவம் நினைவுக்கு வந்தது.  உடனே, “நீங்கள் உங்கள் அம்மா போல அழகாக இருக்கிறீர்கள்”, என்று அந்தச் சிறுமிகளை விழித்து ஜேர்மன் மொழியிலே எழுதியிருந்தேன்.  இரண்டு நாட்கள் கழித்து அந்த்தப் பெண் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  “ நீங்கள் என்னைக் “குண்டு” என்று முகப் புத்தகத்திலே குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று சற்றே மனஸ்தாபத்துடன் கூறினார்.  நான்,” இல்லையே, அழகு என்றல்லவா குறிப்பிட்டிருக்கின்றேன்,” என்று கூறினேன்.  உண்மையில் நடந்த்தது என்ன?  நான் எழுத்திய மிகச் சிறிய யேர்மன் மொழிமூல வசனம் அவருக்குப் புரியவில்லை.உடனேயே எனக்குள் இருக்கின்ற சிறுவர் பராமரிப்பாளர் விளித்துக் கொண்டார்.

ஒவ்வொருவருக்கும் 24 மணிநேரங்கள் தானே கொடுக்கப்பட்டிருக்கின்றது.  எனக்கும் அந்த 24 மணினேரங்கள் தான்.  ஒரு அம்மாவாக எனக்குக் கிடைத்த நேரத்தில் வேலை நேரம் போக மீதி நேரத்தில் அம்மாவுக்கான திறமைகளை (parenting skill) வளர்த்துக் கொள்ளத்தான் சரியாக இருக்கின்றது.  பலகாரம் சுடுத்தல், நண்பர் வீட்டுக் கொண்டாட்டத்திற்கு தேவையான பலகாரங்களைப் பொறுப்பெடுத்துச் செய்தல்.  என்பன எனக்கு முடியவே இல்லை.  எனக்குக் கிடைத்த 24 மணிநேரம் தானே மற்றப் பெண்களுக்கும் கிடைக்கின்றது.  அவர்களுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் சாத்தியம் என்று வியந்திருக்கின்றேன்.  சத்தியமாகச் சொல்கின்றேன்.  இவற்றிற்கெல்லாம் நான் எதிரியில்லை.  இது எப்படிச் சாத்தியமாகின்றது என்ற கேள்விதான் மனதில் எஞ்சிநிற்கின்றது.  மனத்தில் ஒரு சந்தேகமும் வந்து நிற்கின்றது.  ஒருவேளை இவர்கள் எல்லாம் அம்மாப்படிப்புப் படிக்கவேண்டிய நேரத்தைத் தான் சூறையாடுகின்ரார்களோ என்று எண்ணிக்கொள்வேன்.

இந்த்தப் பெண்ணின் விடயத்திற்க்குப் பிறகு என்னுடைய சந்த்தேகம் முற்றாக வலுப்பெற்று விட்டது.  உண்மைதான்.  எமக்கென்று கொடுக்கப்பட்ட 24மணி நேரத்தில் எம்முடைய வேலை நேரம் போக மீதி நேரத்தில் நாம் எம் பிள்ளைகளுக்கு உதவக்கூடிய திறன்களை வளர்ப்பதில்தானே அக்கறை காட்ட வேண்டும்.  அது எம் பிள்ளைகளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்.
.

Friday 21 June 2013

பிள்ளைகளை வழிநடத்த காரணம் கூறுதல் ஒரு சிறந்த வழிமுறையாகும்

”மாறன், நீ இன்று விளையாடப் போக முடியாது,” என்று மாறனின் தயார் சொன்னார்.
”ஏன்,” மாறன் சிணுங்கினான்.
”ஏனா, ஏனென்று தெரியாதா உனக்கு. யன்னலுக்கு வெளியே பார்”  தயார் சத்தமிட்டார்.

மாறனின் தாயார் மட்டுமல்லாது எம்மில் பலபேர் அப்படித்தான் இருக்கிறோம்.  ஒரு செயற்ப்பாட்டிற்க்கான காரணத்தைப் பிள்ளைகள் தாமே சுயமாகத் தெரிந்து இருக்க வேண்டும் என எதிர்பாற்க்கின்றோம் அல்லது காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டிய தேவை பிள்ளைக்கு இல்லை என எண்ணுகின்றோம்.  நாம் சொல்வதை மறுபேச்சு இல்லாமல் பிள்ளை கீழ்ப்படிவுடன் செய்து முடிக்க வேண்டும் என எண்ணுகின்றோம்.

உண்மையிலேயே இது ஒரு தவறான அணுகு முறையாகும்.  இந்த இடத்திலே மாறனின் தாயார், “ மாறன், இன்று நீ விளையாடப் போக முடியாது.  எனென்றால் வெளியே மழை பெய்கின்றது” என்று சொல்லியிருக்க வேண்டும்.  இந்த வாக்கியத்திலே எதிர்பார்க்கப்படும் நடத்தைக்கான கரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஏன்தான் இப்படிக் காரணம் கூறி வழிநடத்த வேண்டும்? இவ்விதமாகக் காரணம் கூறி வழிநடத்துவதால் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன.

1.  பிள்ளைகளிடையே சுய ஒழுக்கத்தை வளர்க்கலாம்.

2.  பிள்ளைகளிடையே சமூக ஆதரவு நடத்தையை (pro social behaviour) வளர்க்கலாம்.

காரணம் கூறுதலும் சுய ஒழுக்கமும்
ஒரு நடத்தைக்கான காரணத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லும் போது பிள்ளைகள் எதிர்காலத்திலும் இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்ற சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதாவது இன்று விளையாடப் போக முடியாது எனென்றால் வெளியே மழை பெய்கின்றது,?” என்று காரணத்துடன் கூடிய கட்டளையை விடுக்கும் போது பிள்ளை எப்பொழுதெல்லாம் மழை பெய்கின்றதோ அப்பொழுதெல்லாம் விளையாடப் போகக் கூடாது என்ற அறிவையும் சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொள்கின்றது.

காரணம் கூறுதலும் சமூக ஆதரவு நடத்தையும்.
சமூக ஆதரவு நடத்தை என்பது இருவருக்கான நட்பான நடத்தையாகும்.  இது இரண்டு வகைப்படும்.  ஒன்று மற்றொருவருடன் அல்லது பலருடன் சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்வது.  மற்றையது உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு உதவுவது.
“ மாலா, உன் தம்பிக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவி செய், அதனால் அவன் விரைவாக வீட்டுப் பாடம் செய்து முடித்துவிடுவான்.”
“கண்ணன் அந்தப் பொம்மையைத் திரும்பவும் லதாவிடம் கொடுத்துவிடு.  அவள் அதை வைத்திருக்க ஆசைப்படுகின்றாள்.
இவ்விதமான காரணங்கூறி வழிநடத்துவதனால் பிள்ளைகள் பிறருக்கு உதவவும் பிறருக்கு இடஞ்சல் இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்கின்றார்கள்.

இந்தக்கட்டுரை தொடர்பான சிறு பரீட்சைஒன்று. மாறனின் தாயார் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மாறனுடன் பேசிய பேச்சுக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான முறையில் காரணங்கூறலுடன் வழிநடத்தப்படும் விடையைத் தெரிவு செய்யவும்.


மாறன் கையில் கத்தி வைத்திருக்கின்றான்.  மாறனின் தாயார் சொல்கின்றார்
1.  “சிறு பிள்ளைகள் கத்தி பாவிப்பது இல்லை என்று உனக்குத் தெரியாதா?”
2.  “உனக்குக் கண் இல்லையா? கத்தி எவ்வளவு கூராக இருக்கின்றது என்று      பார்.”
3.  ”நீ கத்தியைத் தொடும் போது காயப்படுவாய், ஏனென்றால் கத்தி கூராக இருக்கின்றது.”

மாறனின் தம்பி நித்திரை செய்கின்றான்.   மாறன் சத்தம் செய்கின்றான்.
1.  ”மாறன் ஏன் இப்படிச் சத்தம் செய்கின்றாய்.  நீ இப்படிச் சத்தம் செய்தால் நான் எப்படித் தம்பியை நித்திரையாக்குவது?”
2.  ”மாறன், தம்பி நித்திரை செய்யும்போது சத்தம் செய்யாதே என்று எத்தனை தரம் சொல்லியிருக்கின்றேன்?”
3.  “மாறன் தம்பி நித்திரை செய்கின்றான்.  தயவுசெய்து விளங்கிக்கொள்.”
4.  ” மாறன், சத்தத்தைக் குறைத்துக்கொள்.  அப்போது தம்பி இடஞ்சல் இல்லாமல் நன்றாக நித்திரை செய்வான்.”

மாறன் சாப்பாட்டு மேசையில் இருந்து வண்னம் தீட்டுகின்றான்.
1.  ”மாறன் வேலை முடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்ய மறக்காதே.  உனக்குக் காரணம் தெரியும் என்று நினக்கின்றேன்.”
2.  “நல்ல பிள்ளைகள் வேலை முடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்வார்கள்.”
3.  மாறன் வேலைமுடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்துவிடு.  நான் சாப்பாட்டிற்க்காக மேசையை ஆயத்தம் செய்ய வேண்டும்.

சந்தேகமே இல்லை.  மூன்று சந்தர்ப்பங்களிலும் கடைசி விடைகளே சரியானவை.

Sunday 16 June 2013

பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளைகள் கோபமும் குழப்பமும் உள்ளவர்களாக இருப்பது ஏன்?

"பாடசாலை விட்டு வீடு வரும் பிள்ளைகள் கோபமும் குழப்பமும் மூர்க்கமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்" என்று அதிகமான பெற்றோர் முறைப்படுகின்றார்கள்.  சாதாரண பேச்சுத் தமிழில் சொல்வதாக இருந்தால் 'ததிங்கினதோம் போடுகின்றார்கள்' என்று சொல்லலாம்.  இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், "அவன் அப்பா போல கோவக்காரன்", "சண்டைக் கப்பல் வந்துவிட்டது", "பெண் பிள்ளை என்றால் பொறுமை வேண்டும்", என்று ஒரு வார்த்தையில் அல்லது ஒரு விமரிசனத்துடன் பிரச்சனையை முடிக்கப் பார்க்கின்றோமா ?

பிள்ளைகள் இவ்வாறு தொழில்படுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.  பாடசாலை முடிந்து வீடு வரும்போது பிள்ளைகள் பசியாகவும் களைப்பாகவும்  இருப்பார்கள்.  அதுமட்டும் அல்லாமல் பல்வேறுபட்ட வித்தியாசமான மனநிலையிலும் இருப்பார்கள்.  பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்கும் போதும் ஆசிரியரினால் பாராட்டுக்கள் வாங்கும் போதும் மகிழ்ச்சியான மனநிலையுடன் வீட்டுக்கு வருவார்கள்.  மறுதலையாக குறைவான மதிப்பெண்கள் வாங்கும் போதும் ஆசிரியரின் கண்டிப்புக்குள்ளாகும் போதும் கவலையான மனநிலையுடன் வருவார்கள்.  அதுமட்டும் அல்லாமல் நண்பர்களுடனும் சகமாணவர்களுடனும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தால் கோபமான மனநிலையுடன் வீட்டுக்கு வருவார்கள்.

பிள்ளைகள் பசி, களைப்பு, கோபம், கவலை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது வீட்டிற்க்கு வந்ததும் இன்னும் பிரச்சனை பண்ணுவார்கள்.  அளவுக்கு அதிகமாக சத்தம் போடுதல், சண்டை போடுதல், சப்பாத்துக்கள்ளை கழற்றி எறிதல், புத்தகப் பையை வீசி எறிதல், கணநேரத்தில் வீட்டைக் குப்பையாக்குதல் என அதிக அளவில் தொந்தரவு செய்வார்கள். அமைச்சல் இல்லாத பிள்ளைகளாக நடந்து கொள்வார்கள்.  சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.  பெற்றோரும் களைப்பும் பசியும் சோர்வுமாக இருக்கிற பட்சத்தில் கோபமும் சண்டையும் கூச்சலுமே இறுதி விளைவாக அமைந்து விடும்.

இவை எல்லாவற்றையும் தவிர்த்து மனதுக்கு இனிய ஆரோக்கியமான வீட்டுச் சூழலை உண்டாக்கக் கூடிய வழிமுறைகள் சில:

1.  பிள்ளைகள் பாடசாலை முடிந்து வீடு வரும்போது அவர்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் வீட்டை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அடுக்கி வையுங்கள்.

2.  சாப்பாட்டு மேசையை பல இயற்க்கை வண்ண உணவுகளால் அலங்கரித்து வையுங்கள்.  பிள்ளைகளிற்க்குப் பிடித்த ஒன்றிரண்டு உணவு வகைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3.  பிள்ளைகளுடன் சேர்ந்து உணவு அருந்துங்கள்.  பிள்ளைகள் உணவருந்தும் போது நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

4.  சாப்பாட்டு வேளையில் பாடசாலையில் நடந்த விடயங்களைப் பற்றி உரையாடுங்கள்.  பிள்ளைகளின் தவறைக் கண்டுபிடித்து கண்டிக்காதீர்கள்.  அவர்கள் கவலையாக இருந்தால் ஆறுதல் படுத்துங்கள்.  அவர்களின் வெற்றிகளைப் பாரட்டுங்கள்.  அவர்களின் பிரச்சனகளுக்கு ஆரோக்கியமான அறிவுரை கூறுங்கள்.  சாப்பாட்டு நேரமானது மிகவும் மகிழ்சியாக இருக்க வேண்டிய ஒரு நேரமாகும்.  பிள்ளைகளை விரைவாகச் சாப்பிடுமாறு அவசரப்படுத்தாதீர்கள்.  அவர்கள் உணவருந்துவதற்க்குப் போதுமான நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள்.

5.  உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகளை வீட்டுப் பாடம் செய்ய ஊக்கப் படுத்துங்கள்.  சில பிள்ளைகள் தனியாகத் தம் அறைகளில் இருந்து வீட்டுப் பாடம் செய்ய விரும்புவார்கள்.  சில பிள்ளைகள் சாப்பாட்டு மேசையில் இருந்து பெரியவர்களின் உதவியுடன் செய்ய விரும்புவார்கள்.  வீட்டுப் பாடம் செய்யும் வேளையில் வீட்டை அமைதி நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

6.  வீட்டுப் பாடம் முடிந்த பின்பு பிள்ளைகள் ஓய்வு எடுக்க வலியுறுத்துங்கள்.  பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் ஓய்வு எடுங்கள்.  உங்களிற்கும் ஓய்வு தேவை என்பதை பிள்ளைகளிற்கு விளங்க வையுங்கள்.  இழந்த சக்தியை ஈடு செய்ய இரு சாராருக்கும் ஓய்வு அவசியம்.



Saturday 15 June 2013

அளவுக்கு அதிகமான கண்டிப்பு பிள்ளைகளில் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும்

எம் பிள்ளைகளிற்கு நாம் காட்டுகின்ற கண்டிப்பு ஓர் அளவுடன் இருக்க வேண்டும்.  அளவுக்கு அதிகமான கண்டிப்பு பிள்ளைகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

இது என் மகளின் தோழியின் கதை.  அவள் ஓர் அழகான யப்பானியச் சிறுமி.  பார்ப்பதற்கு ஒர் ரோஜாப்பூப்போல மென்மையாக இருப்பாள்.  பழகுவதற்கு மிகவும் இனிமையானவள்.  படிப்பில் மிகவும் கெட்டிக்காரி.  என் மகளிற்கு அவளுடைய நட்புக் கிடைத்ததற்க்காக மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்திருக்கிறேன்.

அவளுக்குப் பிரச்சனை அவளுடைய அம்மாதான்.  அவர் உண்மையிலேயே நல்லவர்தான்.  மிகவும் அக்கறையுள்ள ஒரு தாய்.  மகளுக்கு எந்தக் குறையும் வைப்பது இல்லை.  மகள் ந ல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டுகின்றார்.  தப்பித் தவறி மகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கினால் அதிகம் கண்டிக்கிறார்.  இங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

தாயுடைய அளவுக்கதிகமான கண்டிப்பு மகளினுள்ளே குழப்பங்களை உண்டுபண்ணுகின்றது.   விளைவு: தாயினுடைய கண்டிப்புக்கும் நச்சரிப்புக்கும் பயந்த மகள் பரீட்சை நேரங்களில் நேர்மைக்குறைவாக நடந்து கொள்கின்றாள்.  பரீட்சையின் போது பாடப் புத்தகங்கள மறைத்து வைத்துப் பார்த்து எழுதுகின்றாள்.  சிறு காகிதத் துண்டுகளில் குறிப்புகளை எடுத்து வைத்து பரீட்சை நேரங்களில் பார்த்து எழுதுகின்றாள்.

இது ஒன்றும் அவளுடைய இயற்க்கைச் சுபாவம் இல்லை.  நல்லொழுக்கம் நிறைந்த பெற்றோரிற்குப் பிறந்த நல்லொழுக்கம் மிக்க பெண்தான் அவள். அவளுடைய இந்த நேர்மைக் குறைவான புதிய நடத்தைக்குக் காரணம் அவளுடைய தாயின் அளவுக்கு அதிகமான கண்டிப்புத்தான்.  இந்த நிலமை இப்படியே தொடர்ந்தால் பிள்ளையில் எவ்வளவு பாரதூரமான விளைவுகள் ஏற்ப்படப் போகின்றன.

பிள்ளைகளின் படிப்பு விடயங்களிலும் சுதந்திரத் தன்மையிலும் அளவுக்கு அதிகமான கண்டிப்புக் காட்டுகின்ற பெற்றோர் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். பிள்ளைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.  அவர்களுடைய மதிப்பெண்கள் கூடிக் குறைவது இயல்பான விடயம் தான்.  அதற்க்காகப் பெற்றோர் பதட்டம் அடையத் தேவையில்லை.  பிள்ளைகள் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.