Friday 21 June 2013

பிள்ளைகளை வழிநடத்த காரணம் கூறுதல் ஒரு சிறந்த வழிமுறையாகும்

”மாறன், நீ இன்று விளையாடப் போக முடியாது,” என்று மாறனின் தயார் சொன்னார்.
”ஏன்,” மாறன் சிணுங்கினான்.
”ஏனா, ஏனென்று தெரியாதா உனக்கு. யன்னலுக்கு வெளியே பார்”  தயார் சத்தமிட்டார்.

மாறனின் தாயார் மட்டுமல்லாது எம்மில் பலபேர் அப்படித்தான் இருக்கிறோம்.  ஒரு செயற்ப்பாட்டிற்க்கான காரணத்தைப் பிள்ளைகள் தாமே சுயமாகத் தெரிந்து இருக்க வேண்டும் என எதிர்பாற்க்கின்றோம் அல்லது காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டிய தேவை பிள்ளைக்கு இல்லை என எண்ணுகின்றோம்.  நாம் சொல்வதை மறுபேச்சு இல்லாமல் பிள்ளை கீழ்ப்படிவுடன் செய்து முடிக்க வேண்டும் என எண்ணுகின்றோம்.

உண்மையிலேயே இது ஒரு தவறான அணுகு முறையாகும்.  இந்த இடத்திலே மாறனின் தாயார், “ மாறன், இன்று நீ விளையாடப் போக முடியாது.  எனென்றால் வெளியே மழை பெய்கின்றது” என்று சொல்லியிருக்க வேண்டும்.  இந்த வாக்கியத்திலே எதிர்பார்க்கப்படும் நடத்தைக்கான கரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஏன்தான் இப்படிக் காரணம் கூறி வழிநடத்த வேண்டும்? இவ்விதமாகக் காரணம் கூறி வழிநடத்துவதால் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன.

1.  பிள்ளைகளிடையே சுய ஒழுக்கத்தை வளர்க்கலாம்.

2.  பிள்ளைகளிடையே சமூக ஆதரவு நடத்தையை (pro social behaviour) வளர்க்கலாம்.

காரணம் கூறுதலும் சுய ஒழுக்கமும்
ஒரு நடத்தைக்கான காரணத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லும் போது பிள்ளைகள் எதிர்காலத்திலும் இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்ற சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதாவது இன்று விளையாடப் போக முடியாது எனென்றால் வெளியே மழை பெய்கின்றது,?” என்று காரணத்துடன் கூடிய கட்டளையை விடுக்கும் போது பிள்ளை எப்பொழுதெல்லாம் மழை பெய்கின்றதோ அப்பொழுதெல்லாம் விளையாடப் போகக் கூடாது என்ற அறிவையும் சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொள்கின்றது.

காரணம் கூறுதலும் சமூக ஆதரவு நடத்தையும்.
சமூக ஆதரவு நடத்தை என்பது இருவருக்கான நட்பான நடத்தையாகும்.  இது இரண்டு வகைப்படும்.  ஒன்று மற்றொருவருடன் அல்லது பலருடன் சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்வது.  மற்றையது உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு உதவுவது.
“ மாலா, உன் தம்பிக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவி செய், அதனால் அவன் விரைவாக வீட்டுப் பாடம் செய்து முடித்துவிடுவான்.”
“கண்ணன் அந்தப் பொம்மையைத் திரும்பவும் லதாவிடம் கொடுத்துவிடு.  அவள் அதை வைத்திருக்க ஆசைப்படுகின்றாள்.
இவ்விதமான காரணங்கூறி வழிநடத்துவதனால் பிள்ளைகள் பிறருக்கு உதவவும் பிறருக்கு இடஞ்சல் இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்கின்றார்கள்.

இந்தக்கட்டுரை தொடர்பான சிறு பரீட்சைஒன்று. மாறனின் தாயார் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மாறனுடன் பேசிய பேச்சுக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான முறையில் காரணங்கூறலுடன் வழிநடத்தப்படும் விடையைத் தெரிவு செய்யவும்.


மாறன் கையில் கத்தி வைத்திருக்கின்றான்.  மாறனின் தாயார் சொல்கின்றார்
1.  “சிறு பிள்ளைகள் கத்தி பாவிப்பது இல்லை என்று உனக்குத் தெரியாதா?”
2.  “உனக்குக் கண் இல்லையா? கத்தி எவ்வளவு கூராக இருக்கின்றது என்று      பார்.”
3.  ”நீ கத்தியைத் தொடும் போது காயப்படுவாய், ஏனென்றால் கத்தி கூராக இருக்கின்றது.”

மாறனின் தம்பி நித்திரை செய்கின்றான்.   மாறன் சத்தம் செய்கின்றான்.
1.  ”மாறன் ஏன் இப்படிச் சத்தம் செய்கின்றாய்.  நீ இப்படிச் சத்தம் செய்தால் நான் எப்படித் தம்பியை நித்திரையாக்குவது?”
2.  ”மாறன், தம்பி நித்திரை செய்யும்போது சத்தம் செய்யாதே என்று எத்தனை தரம் சொல்லியிருக்கின்றேன்?”
3.  “மாறன் தம்பி நித்திரை செய்கின்றான்.  தயவுசெய்து விளங்கிக்கொள்.”
4.  ” மாறன், சத்தத்தைக் குறைத்துக்கொள்.  அப்போது தம்பி இடஞ்சல் இல்லாமல் நன்றாக நித்திரை செய்வான்.”

மாறன் சாப்பாட்டு மேசையில் இருந்து வண்னம் தீட்டுகின்றான்.
1.  ”மாறன் வேலை முடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்ய மறக்காதே.  உனக்குக் காரணம் தெரியும் என்று நினக்கின்றேன்.”
2.  “நல்ல பிள்ளைகள் வேலை முடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்வார்கள்.”
3.  மாறன் வேலைமுடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்துவிடு.  நான் சாப்பாட்டிற்க்காக மேசையை ஆயத்தம் செய்ய வேண்டும்.

சந்தேகமே இல்லை.  மூன்று சந்தர்ப்பங்களிலும் கடைசி விடைகளே சரியானவை.

4 comments:

  1. மிகவும் அருமையான பதிவு. சிறுவருக்கு கட்டளைகள், வேண்டுகோள்களைக் கொடுக்கும் போது பலன்களை, விளைவுகளையும் காரணங்களையும் கூறும் போது சிந்திக்கவும், தெளிவுகளையும் பெறுகின்றார்கள். வெறுதே கட்டளைகளை தருவதால் பல சமயம் எதிர்மறை எண்ணங்களையே பெற்றுவிடுவார்கள். பெற்றோர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி

    ReplyDelete
  3. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete