Thursday 23 October 2014

கமல்காசனின் கட்டிப்பிடி வைத்தியம் சிறுவர் பராமரிப்பிலும் உதவி செய்யும்


யாசின் (மூன்று வயதிற்கு இரண்டு மாதங்கள் குறைவு)காலை 8.30 மணிக்கு பராமரிப்புக்காக என்னிடத்தில் வரும்போதே அமைதியற்றவனாகக் காணப்பட்டான்.  வந்தவுடனேயே  சப்பாத்து தொப்பி போன்றவற்றைக் கழற்றி உரிய இடங்களில் வைத்துவிட்டு மேசையில் இருந்து நானும் அவனுமாக காலை உணவு அருந்துவதுதான் வழக்கம்.

ஆனால் அன்று அவன் அதற்குத்  தயாராக இல்லை.  வந்தவுடனேயே சப்பாத்து தொப்பி எதுவும் கழற்றாமல் மேசையில் இருந்த பாண் துண்டை எடுத்துக்கொண்டு வீடு முழுக்க ஓடினான்.  நான் அதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட அவன் சப்பாத்து, தொப்பி என்பவற்றைக் கழற்றி எறிந்துவிட்டு சத்தமாக அழுதான்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்ததில் இதுமாதிரியான கண்டிப்புடன் கூடிய அணுகுமுறை முற்றிலும் பயன்தராது என்பதை நான் நன்கு அறிவேன்.

அவனுக்குள்ளே என்னென்ன மன அழுத்தங்களோ, என்னென்ன அசௌகரியங்க்களோ?  கமலகாசன் சொன்ன கட்டிப்பிடி வைத்தியம் தான் மனதுக்கு வந்தது.
சட்டென்று அவனைத்தூக்கி அணைத்துக்கொண்டேன்.  அவனும் எதிர்ப்பு எதுவும் இல்லாமை அணைந்து கொண்டான்.   அவனுடைய அழுகை படிப்படியாகக் குறையத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவன் முற்றிலும் ஆறுதல் அடைந்தவனாக காணப்பட்டான்.  அழுகையையும் நிறுத்திவிட்டான். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிக மிருதுவான குரலிலே அவன் தன பாவனைப் பொருட்களை ஒழுங்காக ஆரிய இடத்தில் வைக்க வேடியதின் அவசியம் பற்றியும் உணவு மேசையில் இருந்து உணவு அருந்த வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தேன். அவனும் சம்மதித்தவனாக கீழே இறங்கி தொப்பி சப்பாத்து போன்றவற்றை எடுத்து உரிய இடத்தில் வைத்தான்.  பின்பு இருவருமாக அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட மன நிலையுடன் சாப்பாட்டு மேசைஅருகே கதிரையில் இருந்து முறைப்படி உணவு அருந்தத் தொடங்கினோம்.
இதற்க்காக எனக்குத் தேவைப்பட்டதெல்லாம்  சற்று அதிகப்படியான நேரமும் பொறுமையும்தான்.

1 comment:

  1. உண்மை. பல நேரங்களில் நாம் பொறுமை இழந்து குழந்தைகளை அடித்து விட்டுப் பின் வருந்துகிறோம். குழந்தைகளிடம் அவர்களுடைய அலைவரிசைக்கு நாம் மாற வேண்டும்.

    ReplyDelete